ஃபஜர் தொழுகையை எவ்வளவு நீட்டலாம்?

கடமையான தொழுகையில் எவ்வளவு ஓத வேண்டும் என்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். தொழவைக்கும் இமாம் நபியவர்கள் கற்றுக் கொடுத்த அளவிற்கு ஓதினால் அதை குறை
கூறக் கூடாது. அவரைப் பின்பற்றித் தொழவேண்டும். அவர் நபியவர்கள் ஓதிய அளவை விட அதிகமாக ஓதுவது கூடாது.


நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஃபஜர் தொழுகையில் எவ்வளவு ஓதுவார்கள் என்ற விபரம் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபியவர்கள் ஃபஜர் தொழுகையில் 60முதல் 100வசனங்கள் வரை ஓதியுள்ளார்கள்.

541حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا أَبُو الْمِنْهَالِ عَنْ أَبِي بَرْزَةَ كَانَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الصُّبْحَ وَأَحَدُنَا يَعْرِفُ جَلِيسَهُ وَيَقْرَأُ فِيهَا مَا بَيْنَ
السِّتِّينَ إِلَى الْمِائَةِ رواه البخاري

அபூபர்ஸா நள்லா பின் உபைத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

எங்களில் ஒருவர் தம் பக்கத்திலிருப்பவரை அறிந்து கொள்ளும் (அளவிற்கு வெளிச்சம் வந்துவிடும்) நேரத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்சுப்ஹுத் தொழுவிப்பவராக இருந்தார்கள். அறுபது (வசனங்கள்) முதல் நூறு (வசனங்கள்) வரை சுப்ஹுத் தொழுகையில் ஓதுவார்கள்.

நூல் : புகாரி 541

இரண்டு ரக்அத்களிலும் ஓதப்படும் மொத்த வசனங்கள் அதிகபட்சமாக 100வரைக்கும் இருக்கலாம். இந்த எண்ணிக்கையைத்தாண்டி ஓதுவது கூடாது.

ஃபஜருடைய இரண்டு ரக்அத்களில் முதல் ரக்அத் விட இரண்டாவது ரக்அத் சுருக்கமாக இருக்க வேண்டும்.
779حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي
قَتَادَةَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الْأُولَى مِنْ
صَلَاةِ الظُّهْرِ وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ وَيَفْعَلُ ذَلِكَ فِي صَلَاةِ الصُّبْحِ رواه البخاري

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையின் முதலாவது ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள்; இரண்டாவது ரக்அத்தில் குறைவாக ஓதுவார்கள். சுப்ஹுத் தொழுகையிலும் இவ்வாறே செய்வார்கள்.

நூல் : புகாரி 779

நபியவர்கள் கற்றுக் கொடுத்த அளவைத்தாண்டி நீண்ட சூராக்களை இமாம் ஓதினால் அப்போது மட்டும் அவரைப் பின்பற்றாமல் தனியே தொழுதுவிட்டுச் செல்லலாம். இமாம் இத்தவறைத்தொடர்ந்து செய்தால் அதை நாம் அவருக்கு உணர்த்த வேண்டும்.

6106حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَادَةَ أَخْبَرَنَا يَزِيدُ أَخْبَرَنَا سَلِيمٌ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ
حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَأْتِي قَوْمَهُ فَيُصَلِّي بِهِمْ الصَّلَاةَ فَقَرَأَ بِهِمْ الْبَقَرَةَ قَالَ فَتَجَوَّزَ
رَجُلٌ فَصَلَّى صَلَاةً خَفِيفَةً فَبَلَغَ ذَلِكَ مُعَاذًا فَقَالَ إِنَّهُ مُنَافِقٌ فَبَلَغَ ذَلِكَ الرَّجُلَ فَأَتَى
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا قَوْمٌ نَعْمَلُ بِأَيْدِينَا وَنَسْقِي
بِنَوَاضِحِنَا وَإِنَّ مُعَاذًا صَلَّى بِنَا الْبَارِحَةَ فَقَرَأَ الْبَقَرَةَ فَتَجَوَّزْتُ فَزَعَمَ أَنِّي مُنَافِقٌ
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مُعَاذُ أَفَتَّانٌ أَنْتَ ثَلَاثًا اقْرَأْ وَالشَّمْسِ وَضُحَاهَا
وَسَبِّحْ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَنَحْوَهَا رواه البخاري

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு தம் (பனூ சலமா) கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களுடன் தொழுத அதே தொழுகையைத் தொழுவிப்பது வழக்கம். (ஒரு முறை அவர் இஷாத் தொழுகை நடத்தும் போது) (நீண்ட அத்தியாயமான) "அல்பகரா' எனும் (2ஆவது) அத்தியாயத்தை ஓதினார். அப்போது ஒரு மனிதர்
(தனியாக விலகிச் சென்று) விரைவாகத் தொழுது(விட்டுத் தமது பணியைக் கவனிக்கச் சென்று) விட்டார். இச்செய்தி முஆத் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், "அவர் ஒரு நயவஞ்சகர் (முனாஃபிக்)'' என்று சொன்னார்கள். அந்த மனிதருக்கு இச்செய்தி எட்டியதும் அவர்
நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உழைக்கும் வர்க்கத்தினர். எங்கள் ஒட்டகங்கள் மூலம் நீர்ப் பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் அவர்கள் நேற்றிரவு எங்களுக்குத் தொழுவித்த போது (நீண்ட அத்தியாயமான) "அல்பகரா'வை ஓதினார்கள். ஆகவே, நான் (விலகித்
தனியாகச் சென்று) விரைவாகத் தொழுதேன். இதனால் அவர் என்னை நயவஞ்சகன் என்று சொன்னாராம்'' என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம், "முஆதே! (நீரென்ன) குழப்பவாதியா?''  என்று மூன்று முறை கேட்டார்கள். மேலும், "(நீர் இமாமாக
நிற்கும்போது) ஸப்பிஹிஸ்ம ரப்பிக்க, வஷ்ஷம்ஸி வளுஹாஹா போன்ற (சற்று சிறிய) அத்தியாயங்களை ஓதுவீராக!'' என்றும் சொன்னார்கள்.

நூல் : புகாரி 6106

90حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ ابْنِ أَبِي خَالِدٍ عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ
عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ لَا أَكَادُ أُدْرِكُ الصَّلَاةَ مِمَّا
يُطَوِّلُ بِنَا فُلَانٌ فَمَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْ
يَوْمِئِذٍ فَقَالَ أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ مُنَفِّرُونَ فَمَنْ صَلَّى بِالنَّاسِ فَلْيُخَفِّفْ فَإِنَّ فِيهِمْ الْمَرِيضَ
وَالضَّعِيفَ وَذَا الْحَاجَةِ رواه البخاري

அபூமஸ்ஊத் (உக்பா பின் அம்ர்) அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

ஒரு மனிதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! இன்னார் (இமாமாக நின்று தொழுகை நடத்தும் போது) தொழுகையை எங்களுக்கு நீட்டிக் கொண்டே போவதால் என்னால் பெரும்பாலும் (கூட்டுத்) தொழுகையில் சேர்ந்து கொள்ள முடிவதில்லை' என்று (முறையிட்டுக்)
கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் உரையாற்றலானார்கள். முன் எப்போதும் அடைந்திராத அளவுகோபத்தை அன்றைய தின உரையில் நான் கண்டேன். (அவ்வுரையில்) "மக்களே! நீங்கள் வெறுப்பூட்டுபவர்களாகவே உள்ளீர்கள். எவர் மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுகை நடத்தினாலும் அவர் சுருக்கமா(கவே தொழுவி)க் கட்டும். ஏனெனில் (தொழ வந்த) மக்களில்
நோயாளிகள், பலவீனமானவர்கள், (பல்வேறு) அலுவல் உடையோர் நிச்சயம் இருப்பார்கள்'' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 90

தொழவைக்கும் இமாம் கடமையான தொழுகைகளை அதிகம் நீட்டக்கூடாது என்று மார்க்கம் கூறுகின்றது.